தமிழகத்தில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஹாப்பி நியூஸ் – இனி பேருந்துகளில் இலவச பயணம்!

தமிழகத்தில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஹாப்பி நியூஸ் – இனி பேருந்துகளில் இலவச பயணம்!


தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 1 வருடம் ஆக உள்ள நிலையில், எந்த துறைகளிலும் பாரபட்சம் பார்க்காமல் அரசு நல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இனி அரசு பேருந்துகளில் கட்டணம் கிடையாது என்ற அறிவிப்பை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ளார்.

முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை மீதான கோரிக்கை விவாதம் நடைபெற்று, மே 10-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 9-ம் தேதி காவல்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துறை என்பதால் இது முக்கியம் வாய்ந்ததாக எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையாக திமுக , அரசு நகர சாதாரணப் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் செலுத்தி பயணச்சீட்டு எடுக்காமல் இலவசமாக, தாங்கள் செல்லும் இடங்களுக்கு பயணம் செய்யலாம் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, புதிய அமைச்சரவை பதவியேற்புக்கு பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். இதில், 3 ஆவது திட்டமாக தமிழ்நாடு முழுவதும் அரசின் சாதாரண நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்பதாகும். இவற்றிற்கான அரசாணை உடனடியாக பிறப்பிக்கப்பட்டது.

இந்த திட்டம் அமலுக்கு வந்து 11 மாதம் ஆக உள்ள நிலையில், பெண்கள் மத்தியில் இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அரசு பேருந்துகளில் 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் பயணம் மேற்கொள்ள அரைக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு சில பேருந்துகளில் முழு கட்டணம் கூட வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் இனி கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து மே 12 ல் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.