தமிழகத்தில் புதிய வகை கொரோனா பாதிப்பு பள்ளிகள் திறப்பில் மாற்றம்?
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் புதிய வகை பாதிப்பு மக்கள் மத்தியில் அதிக அளவில் பரவி வருகிறது.
தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருவதால், தமிழக பள்ளிகள் புதிய கல்வியாண்டில் திறக்கப்படும் தேதிகள் குறித்து குழப்பம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கல்விக்கு அரசு எப்போதும் அதிக முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறது. இன்றைய மாணவர்கள் தான் நாட்டின் நாளைய தலைவர்கள் என்பதால் மாணவர்களின் கல்வி மற்றும் அறிவு திறனை வளர்க்க அரசு பல புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக பரவத் தொடங்கிய கொரோனா தொற்றின் காரணமாக மிக மோசமான நிலை நிலவி வந்தது. இதனால் அரசு பள்ளிகளை மூட உத்தரவிட்டது. மேலும், ஆன்லைன் மற்றும் கல்வி டிவி வாயிலாக மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து 2 ஆண்டுகளாக மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு சென்று கல்வி கற்காத நிலையால், அவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டது. எனவே, விரைவில் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு நடவடிக்கை எடுத்தது. கடந்த கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு ஆரம்பத்தில் சுழற்சி முறையிலும், பின்னர் கட்டுப்பாடுகளுடனும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. தற்போது 2022-2023ம் புதிய கல்வி ஆண்டில் ஜூன் 13ம் தேதி முதல் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு வழக்கமான முறையில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு முன்னதாக அறிவித்திருந்தது. இதற்கான ஆயத்த பணிகளும் நடந்து வருகிறது.
ஆனால், தற்போது தமிழகத்தில் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மீண்டும், அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இதனால், தமிழகத்தில் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருக்குமா என்று குழப்பம் எழுந்துள்ளது. ஆனால் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இது குறித்து செய்தியாளர்களிடம், பள்ளிகள் திறப்பதில் எந்த வித மாற்றத்தையும் அரசு அறிவிக்கவில்லை.
முன்னதாக அறிவித்துள்ள படி, 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 13ம் தேதியும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் திறப்பில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், அவை முதல்வர் அலுவகம் மூலம் அறிவிக்கப்பட்டு, அதன்பின்னர் மாற்றங்கள் குறித்து தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.